உள்ளூர் செய்திகள்
மோசடி

புவனகிரி பேரூராட்சியில் ரூ. 1 கோடி பணம் மோசடி செய்த ஊழியர்

Published On 2022-04-10 10:03 GMT   |   Update On 2022-04-10 10:03 GMT
புவனகிரி பேரூராட்சியில் ரூ. 1 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி:

புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாஷா பணியில் இருந்த போது தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வீரமணி செயல் அலுவலர் கையெழுத்தை இவரே போட்டு ரூ. 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 காசோலைகள்மூலம் பணமோசடி செய்துள்ளார்.

தற்போது புவனகிரி பேரூராட்சியில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கு தணிக்கையில் வீரமணி மோசடி செய்துள்ளார் என்பதும் அதன் பின்னர் அவர் பணிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

உடனே தற்போது பணியில் உள்ள புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

மேலும் போலீசார் இந்த பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று வேறு ஏதாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News