உள்ளூர் செய்திகள்
செங்கம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
செங்கம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
செங்கம்:
செங்கம் நகரில் நேற்று காலை பழைய பஸ் நிலையம் அருகே சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் உருக்குலைந்து லாரியிலிருந்து ஆயில் உள்ளிட்டவைகள் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தினால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் லாரியை கிரேன் எந்திரம் மூலம் மீட்டு கொண்டு சென்றனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் சுப விசேஷங்களுக்கு செல்ல சாலையில் சென்ற வண்ணம் இருந்ததால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற ஊர்திகள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
எனவே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை அகற்றி சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.