உள்ளூர் செய்திகள்
கைது

புதுவை விடுதியில் பிரபல கொள்ளையன் கைது

Published On 2022-03-29 08:32 IST   |   Update On 2022-03-29 08:32:00 IST
புதுவை தனியார் விடுதியில் பதுங்கி இருந்த தமிழகத்தை கலக்கிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 24). இவர் மீது ஈரோடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டு தமிழகத்தை கலக்கிய 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பிரபல கொள்ளையனான நாகராஜ் நீண்ட காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே நாகராஜ் கடந்த வாரம் ஈரோட்டில் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.

அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரோடு போலீசார் புதுச்சேரி விரைந்து வந்தனர். பின்னர் ஒதியஞ்சாலை போலீசார் உதவியுடன் அந்த தங்கும் விடுதியை சுற்றி வளைத்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு அழைத்துச் சென்றனர்.

Similar News