உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் வேலை நிறுத்த போராட்டம்: தொழிற்பேட்டைகள்- வங்கிகள் முடங்கியது

Published On 2022-03-28 15:37 IST   |   Update On 2022-03-28 15:37:00 IST
தனியார் மயம், ஊரக வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

புதுச்சேரி:

புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., எம்.எல்.எப்., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று வேலைநிறுத்தமும், நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி இன்று புதுவையில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளான தட்டாஞ்சாவடி, திருபுவனை, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

அதேநேரத்தில் அரசு அலுவலகங்களில் இன்றும், நாளையும் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியது.

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் புதுவையில் வங்கிகள் இயங்கவில்லை. பண பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டத்தையொட்டி புதுவை நகர், தொழிற்பேட்டை பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தில் போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் வழக்கத்தைவிட குறைவாகவே இயக்கப்பட்டன. இதனால் புதுவையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும், தமிழக பகுதியில் இருந்து புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைவாக இயங்கியது. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Similar News