உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வியாபாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

Published On 2022-03-27 12:10 IST   |   Update On 2022-03-27 12:10:00 IST
பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக புதுவை வியாபாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மும்பையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 50). இவர் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய விரும்பி சமூக வலைதளத்தை தொடர்பு கொண்டார். 

அப்போது மும்பையை சேர்ந்த அங்கீட் ஜெய்ஸ்வால் (29), ரோகித் குமார்சிங் (20) ஆகியோர் சிவசங்கரிடம் தொடர்பு கொண்டு எங்கள் மூலம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினர். 

இதனை நம்பி சிவசங்கர் அவர்களை புதுவைக்கு வரவழைத்து ரூ.25 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதன் பிறகு லாபத் தொகை எதுவும் சிவசங்கரிடம் கொடுக்கவில்லை. 

இதனால் ஏமாற்றம் அடைந்த சிவசங்கர் பணம் பெற்ற  அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங்கிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். 

அதற்கு அவர்கள் ரூ.13 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். 
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சிவசங்கர் புதுவை கோர்ட்டில் முறையீடு செய்தார். கோர்ட்டு உத்தர வின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் பெங்களூரில் தங்கி இருப்பது செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது. 

இதையடுத்து பெரியக் கடை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் தனிப் படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று அங்கு பதுங்கி  இருந்த அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங் ஆகிய 2 பேரையும்  கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். 

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Similar News