உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட் உத்தரவின்படி நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 132 ஏரிகள், 1219 குளம், குட்டைகள், 672 வரத்து வாய்கால்களும் உள்ளன.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி பெரம்பலூர் மாவட்ட நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பான இரண்டு முழு குடியிருப்பு அகற்றப்பட்டது.
மேலும் நாரணமங்கலம் மற்றும் குரும்பாபாளையம் கிராமங்களில் உள்ள கருப்புடையார் ஏரி மற்றும் பில்லாலையம் குளத்தில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளான பயிர் செய்யப்பட்டு அறுவடை முடிந்த நிலையில் இருந்த இரண்டு விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி அகற்றப்பட்டது.
நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.