உள்ளூர் செய்திகள்
நெடுமரம் பஞ்சுவிரட்டு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் மஞ்சு விரட்டு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில் மலையரசி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வருகிற பங்குனி 10ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் மஞ்சுவிரட்டை நெடுமரம், சில்லாம்பட்டி, ஊக்குளத்தான்பட்டி, உடையநாதபுரம், என்.புதூர் உள்ளிட்ட 5 கிராமத்தார்கள் நடத்துவார்கள். அதேபோன்று பங்குனி 16ந்தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டு நெடுமரம் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நடத்துவார்கள்.
இந்த 2 மஞ்சுவிரட்டுகள் தொடர்பாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் காவல் துணைகண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, நெடுமரம் ஊராட்சிமன்ற தலைவர் மாணிக்கவாசகம், திருப்புத்தூர் நகர காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் நெடுமரம் கிராம முக்கியஸ்தர்கள், மஞ்சுவிரட்டு நடத்தும் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர், கால்நடை துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சுவிரட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் நெடுமரம் மஞ்சுவிரட்டு நடத்தும் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாலோசித்தனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளுவார்கள் என்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.