உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா பேசிய போது எடுத்த படம்.

பெண் குழந்தைகள் படிக்கும் வயதில் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்

Published On 2022-03-21 14:04 IST   |   Update On 2022-03-21 14:06:00 IST
குன்னம் அரசு மகளிர் பள்ளியில் மேலாண்மை குழு நடை பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நம் பள்ளி நம் பெருமை -பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்களுக்கான விழிப் புணர்வு கூட்டத்தில்  கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு பேசியதாவது:

பள்ளி மேலாண்மைக்குழு என்பது   பெற்றோர்கள், ஆசிரியர்கள்,    உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்   போன்ற 20 உறுப்பினர்கள்   கொண்ட ஒரு குழு. அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களில்  ஒருவர் குழுவின் தலைவராக இருப்பார்.

2 ஆண்டிற்கு ஒரு முறை இக்குழு மாற்றி அமைக்கப்படும். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி   குழந்தைகளுக்கு  தரமான  கல்வி கிடைப்பதை   இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் கல்வியில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது.  குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தன் காரணமாக தற்போது  அனைத்து  குழந்தைகளும் பள்ளியில் பயின்று வருகின்றனர். பெண் குழந்தைகள்  கல்வி  பயிலும் வயதில் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.

ஒரு பள்ளியின் செயல் பாடுகள் சிறப்பாக இருந்தால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ஏற்றம் பெருவார்கள்,   அதற்கு பள்ளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பள்ளி மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியுடன் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு இந்த பள்ளி மேலாண்மைக்குழு ஒரு பாலமாக அமையும்.

கடந்த காலங்களில்  பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் மற்றும்  பள்ளியிலிருந்து  மாற்றுச்சான்றிதழ்  பெறுவதற்கும்   மட்டுமே  வருகை  தருவார்கள்.

அதனை மாற்றி தங்களின் பிள்ளைகளின் தனித்திறமையை கண்டறிந்து எடுத்துச் செல்வதற்காகவும் பள்ளியுடன் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக இந்த பள்ளி கல்வி மேலாண்மைக்குழு அமைக்கட்டுள்ளது என்றார்.

Similar News