உள்ளூர் செய்திகள்
மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்கசிவால் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது50). கார் டிரைவர். இவரது மனைவி செல்வி.
இவர் அதே பகுதியில் பழனி என்பவரின் ஓட்டு வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலுள்ள மின் வயர்களில் ஏற்பட்ட மின்கசிவால் தீ ஏற்பட்டது. தீ மளமள என பரவியதால் வீடு முழுவதும் பரவியது. இதில் வீடு தீப்பற்றி எரிவதை கண்ட கணவன் &மனைவி இருவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, 2 பவுன் நகை, பணம் 5 ஆயிரம், வீட்டு சாமான்கள், புடவைகள், ஆவணங்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கண்ணன்& செல்வி ஆகியோரின் மகன் பிரகாஷ் (22) கடந்த 2 மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக வடு மறையாமல் வேதனை யில் இருந்து வந்தனர். இந்த நிலையில் குடியிருந்த வீடும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மீண்டும் அவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய சம்பவம் மாறி வேதனையில் ஆழ்த்தியுள்ளது.