உள்ளூர் செய்திகள்
.

ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2022-03-19 15:06 IST   |   Update On 2022-03-19 15:06:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பர்கூர்-வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் ஜங்சன் பிரிவு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். லாரியில் 44 பைகளில் சுமார் 1 டன் புகையிலை பொருட்கள் இருப்பதும், அதன் மதிப்பு சுமார் 6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் லாரியில் இருந்து தப்பியோடியவர்கள் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன் (41), பழைய தருமபுரியை சேர்ந்த தமிழகன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Similar News