உள்ளூர் செய்திகள்
பண இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் வியாபாரி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பணம் இரட்டிப்பு விவகாரத்தில் தருமபுரி வியாபாரி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சைதா பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது25). இவர் மத்தூர் பஸ்நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும், தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா கள்ளியூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராமலிங்கம் தன்னிடம் ரூ.1லட்சம் கொடுத்தால் அதை 2 லட்சமாக சில மாதங்களில் இரட்டிப் பாக தருகிறேன் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கூறினார்.
இதனை நம்பிய அவர், ராமலிங்கத்திடம் ரூ-.1 லட்சத்தை கொடுத் துள்ளார். ஆனால் 2 வருடமாகியும் அந்த பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்து கடந்த மாதம் 27ந்தேதி அன்று ராம லிங்கத்தை ஆட்களை வைத்து கடத்தியுள்ளார். பிறகு கடத்திய ராமலிங்கத்தை திருப்பூரில் உள்ள ஒரு இடத்தில் வைத் துள்ளனர்.
அப்போது நீ வாங்கிய பணம் யாரிடம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு ராமலிங்கம் உன்னிடம் வாங்கிய பணத்தை நான் பொம்மிடி அடுத்துள்ள ஜாலியூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசனிடம் கொடுத்துள்ளேன் என்றார். உடனே அங்கு விரைந்த கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் வருவது தெரிந்து சிலம்பரசன் தப்பி சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்தூர் போலீசில் ராமலிங்கம் மனைவி புகார் செய்தார். அதில் எனது கணவரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்று விட்டார் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் பூக்கடைக்காரர் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கடத்தல் கும்பலிடம் இருந்து ராமலிங்கம் தப்பி வந்து விட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்பின்னரே பண இரட்டிப்பு மோசடி, கடத்தல் விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.