உள்ளூர் செய்திகள்
விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணிகள் தீவிரம்
வீடுவீடாக சென்று 1 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டு விட்டதா என்பதை செவிலியர் கேட்டறிவார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 600 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 27-ந்தேதி, 1,154 மையங்களில் முகாம் நடத்தப்பட்டது.
முகாம் நிறைவில் 96.2 சதவீதம் (1.90 லட்சம்) குழந்தைகளுக்கு மட்டுமே சொட்டுமருந்து வழங்கப்பட்டது. மீதமுள்ள குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசி வழங்க மாவட்ட அளவில் சுகாதார செவிலியர் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வீடுவீடாக சென்று 1 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டு விட்டதா என்பதை கேட்டறிவர். மருந்து வழங்குவது எப்படி? ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு, இடது கை சுண்டுவிரலில் ‘மார்க்‘ செய்யப்பட்டிருந்தால் வீட்டின் கதவில் ‘பி’ என (பிரசன்ட்) மார்க் செய்வர்.
குழந்தை இருந்து சொட்டு மருந்து செலுத்தவில்லை என்றால், ‘ஏ’ என (ஆப்சென்ட்) மார்க் செய்வர். அக்குழந்தையின் பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் விபரங்களை பெற்று கொள்வர்.
அந்த குழந்தை மாநிலத்தின் வேறு ஏதேனும் பகுதியில் போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரிப்பர். இல்லாவிடில் இன்று முதல் 5-ந்தேதி வரையிலான 3 நாட்களில் அக்குழந்தைக்கு சொட்டுமருந்து வழங்கப்படும்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்:
ஒரு தவணை சொட்டுமருந்து மட்டும் வழங்குவதால் 100 சதவீதம் அனைத்து குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கிடைத்திருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். நடப்பு வாரம் முழுதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்றனர்.