உள்ளூர் செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27ந் தேதி 1264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறையின் மூலம் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 27ந் தேதி அன்று மாவட்டம் முழுவதும் 1,264 மையங்கள் மூலம் நடைபெற உள்ளன.
முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் நலன்கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டுமருந்து வழங்க உள்ளன.
அதேபோல், ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் பொதுமக்களின் தேவைக்காக சிறப்பு மையங்கள் அமைத்து செயல்பட உள்ளன.
அன்றையதினம் பணி மேற்கொள்வதற்காக பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித் துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து 5,060 பேர் பணியாற்ற உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகளை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ராம்கணேஷ், இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) யோகவதி மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.