உள்ளூர் செய்திகள்
பெண் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்

கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த கோரி அ.தி.மு.க.வினர் மறியல்- பெண் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்

Published On 2022-02-23 16:35 IST   |   Update On 2022-02-23 16:35:00 IST
கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அன்று இரவு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 45 வார்டுகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் இந்த பாதுகாப்பு அறையை திறந்து வாக்கு எந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் வேட்பாளர்கள், முகவர்கள் வந்தனர்.

அப்போது அந்த பாதுகாப்பு அறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதாக ஊழியர்கள் கூறினர். இதனால் எந்திரம் மூலம் அந்த அறை பூட்டை அறுத்து கதவை திறந்து மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகு கடலூர் மாநாகராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 34 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ஜ.க., சுயேட்சைகள் 5 வாடுகளிலும் வெற்றி பெற்றனர்.

இன்று கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமையில், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், மீனவர் அணி துணை செயலாளர் தங்கமணி மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், நிர்வாகிகள், அ.தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே திரண்டனர்.

பாதுகாப்பு அறையின் பூட்டை எந்திரம் மூலம் அறுத்து திறந்தது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த அறையை திறந்துள்ளனர். நேற்றே இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்போடு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து வாக்கு எந்திரங்களை மாற்றியுள் ளனர்.

எனவே கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ்சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த் தை நடத்தினர்.

அப்போது திடீரென ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் போராட்டம் நடந்த இடத்தில் புகுந்தார். தன்மீது மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்கப்போவதாக ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினரும், போலீ சாரும் அந்த பெண்ணை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணைகேனை பறித்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாங்கள் அனைவரையும் உள்ளே அனுதிக்கவேண்டும் என்று கேட்டனர். ஆனால் உங்கள் பிரதிநிதியாகத்தான் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலெக்டரை சந்திக்கிறார்கள். 

எனவே உங்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பிறகு கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது கோரிக்கை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் மின்னணு எந்திரங்கள் மாற்றப்பட்டது, அதிகாரிகள் தன்னிச்சையாக அறையின் பூட்டை அறுத்து திறந்தது, கடலூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் மறுதேர்தல் நடத்தவேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News