உள்ளூர் செய்திகள்
போராட்டம்

சாமி ஊர்வலத்துக்கு பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-02-21 15:57 IST   |   Update On 2022-02-21 15:57:00 IST
சாமி ஊர்வலத்துக்கு பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் கடந்த 16-ந் தேதி மாசிமக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக சாமி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அந்த சாமி ஊர்வலத்தை பொதுபாதை வழியாக கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வருமானவரித் துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சாமி ஊர்வலத்தை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த மக்கள் அன்றைக்கு ஏற்பாடு செய்திருந்த சாமி ஊர்வலத்தை ரத்து செய்தனர்.

இன்று காலை செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் வக்கீல் திருமார்பன் தலைமையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். பொதுமக்கள் தரப்பில் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்த மக்கள் சாமி ஊர்வலம் செல்வதற்கான பாதை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News