உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

Published On 2022-02-20 16:35 IST   |   Update On 2022-02-20 16:35:00 IST
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நேரம் முடிந்து விட்டது என போலீசார் திட்ட வட்டமாக கூறினர். ஆனால் அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே கட்டமாக ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்று முடிந்தது.

அதனைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரவு வாக்கு பெட்டி எந்திரம் பாதுகாப்பாக கடலூர் புனித வளனார் வைக்கப்பட்டு 24 நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கடலூர் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுமுடிந்தது. அதன்பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கொரோனா பாதித்த நபர்களுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி அளித்த நிலையில், 30-க்கும் மேற் பட்ட நபர்கள் வாக்களிக்க வேண்டுமென திரண்டனர்.

அப்போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நேரம் முடிந்து விட்டது என போலீசார் திட்ட வட்டமாக கூறினர். ஆனால் அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News