கடலூர் மாவட்ட வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம்- பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நாளை (19-ந் தேதி) ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் விறுவிறுப்பான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் 437 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 லட்சத்து 78 ஆயிரத்து 812 வாக்காளர்கள் 715 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனர்.
நேற்று இறுதி கட்ட பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் 51 பொருட்கள் கடலூர் மாநகராட்சி மற்றும் அந்தந்த அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்கு பதிவு மையங்களுக்கு செல்லக்கூடிய வகையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அந்தந்த வாக்குப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பில் வாக்கு பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனையொட்டி அந்தந்த அரசு அலுவலகங்களில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.