உள்ளூர் செய்திகள்
கிழவன்-கிழவி மாசி மாத திருவிழா நடந்தது.

மாசி திருவிழா

Published On 2022-02-17 16:49 IST   |   Update On 2022-02-17 16:49:00 IST
நெற்குப்பை பொதுபிச்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் “ராவாத்தா” என்னும் மாசி மாத திருவிழா   விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்&கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள்.

விழாவின் 10ம் நாளன்று இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

விழாவின் 10ம் நாளான நேற்று அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்& கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர்.  பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டு   விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

இந்த விழாவை தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இறுதியாக இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பரிசு பொருட்களை ஏலம்விட்டு அதனால் ஈட்டப்படும் லாபத்தை கோவில் நிர்வாக பணிக்கு கொடுத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். 

Similar News