உள்ளூர் செய்திகள்
கொலை

சிவகங்கையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை

Published On 2022-02-15 12:32 IST   |   Update On 2022-02-15 12:32:00 IST
சிவகங்கையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் இளங்கோ (வயது 31), மணிவண்ணன்(26).

இவர்களில் மணிவண்ணன் சிவகங்கை நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வாங்க கடைக்கு சென்றபோது, அங்கு புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களுக்கும் மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முன்விரோதத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்த நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மணிவண்ணனின் சகோதரர் இளங்கோ மேலூர் சாலையில் நேற்று புதிதாக ஓட்டல் திறந்தார். காலையில் தொடங்கிய வியாபாரம் இரவு வரை விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் மணிவண்ணன் மற்றும் இளங்கோ வியாபாரத்தை முடித்து விட்டு சாப்பிட தொடங்கினர்.

அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இங்கு மணிவண்ணன் யார் என்று கேட்டனர். இதையடுத்து மணிவண்ணன் எழுந்தார்.

அப்போது அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இருவரையும் வெட்டியதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி தப்பிச்சென்று விட்டது. பின்பு பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் இளங்கோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணிவண்ணன் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்துவந்த முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News