உள்ளூர் செய்திகள்
தாடாளன் பெருமாள் கோவிலில் 50-ம் ஆண்டு திருவிளக்குபூஜை
சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் 50-ம் ஆண்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருவிக்கிரம நாராயணப் பெருமாள் என்னும் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். உற்சவர் தாடாளன்பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார்.
108 திவ்ய தேசங்களில் 23வது திவ்ய தேசமான இக்கோவிலில் மூலவர் திருவிக்ரம நாராயண பெருமாள் எனும் உலகளந்த பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுதோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே இக்கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் தைமாத கடை வெள்ளியை முன்னிட்டு 50-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், வீட்டில் செல்வவளம் மற்றும் மகிழ்ச்சி பெருகும், அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் வேண்டும் எனவும். திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நீண்ட நாள் நிலைக்கவும் வேண்டி விளக்கேற்றி மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை கே.கே.சி.சீனுவாச சுவாமி மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோர் செய்திருந்தினர். பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.