கடலூர்:
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். மேலும் நாளை (13 -ந்தேதி) முதல் 15- ந்தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையுடன் தொடங்கி மழை தொடர்ந்து பெய்து வந்தது.
கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு மதியம் சுட்டெரிக்கும் வெயில் மாலை குளிர்ந்த காற்று என்ற சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே பொதுமக்களுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காணமுடிகிறது.
மேலும் சாலை ஓரங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி இருக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:-
பரங்கிப்பேட்டை- 92.6, புவனகிரி- 91.0, சிதம்பரம்- 89.8, அண்ணாமலைநகர்- 83.2, காட்டுமன்னார்கோயில்-64.0, கொத்தவாச்சேரி- 54.0, லால்பேட்டை- 50.6, சேத்தியாதோப்பு- 49.2, கடலூர்- 18.8, கலெக்டர் அலுவலகம் - 18.8 ஸ்ரீமுஷ்ணம்- 14.2, குறிஞ்சிப்பாடி- 10.0, பெல்லாந்துறை- 8.6, வானமாதேவி- 7.0, குப்பநத்தம்- 5.2, விருத்தாசலம்- 4.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி- 4.0, பண்ருட்டி- 3.3, வடக்குத்து-3.0, மீமாத்தூர்-2.0, காட்டுமயிலூர்-1.0, வேப்பூர்-1.0, என மொத்தம் 675.30 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.