உள்ளூர் செய்திகள்
வடபாதி மாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா
சீர்காழி வடபாதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி வடபாதி மாரியம்மன் கோவிலில் நடை பெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் அலகுக் காவடி, பறவைக் காவடி எடுத்துவந்து வழிபட்டனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள்கள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் கடந்த 2&ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் பால்குடம், அலகுக் காவடிகள், பறவைக் காவடிகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.