உள்ளூர் செய்திகள்
மரணம்

இலுப்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மேலும் ஒருவர் பலி

Published On 2022-02-12 10:56 IST   |   Update On 2022-02-12 10:56:00 IST
ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்த கபடி வீரரும், விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாண்டி முருகன் (வயது 19) என்பவர் ஒரு காளை முட்டியதில் உயிரிழந்தார்.

மேலும், இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பார்வையாளராக சென்று ஜல்லிக்கட்டு போட்டியை திம்மயம்பட்டியை சேர்ந்த மணி (45) என்பவர் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பாய்ந்து வந்த மாடு முட்டியதில் அவரது வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் திருநல்லுர் ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு இரண்டாக உயர்ந்துள்ளது.

Similar News