உள்ளூர் செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவு குறைப்பு

Published On 2022-02-11 16:05 IST   |   Update On 2022-02-11 16:05:00 IST
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.

அதன்படி தற்போது நெல் அறுவடை ஓரளவு முடிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வடவாறு வழியாக வரக்கூடிய நீர்வரத்து வீராணம் ஏரிக்கு நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 44.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.

சென்னை மாநகர் குடிநீருக்காக நேற்று 63 கனஅடி நீர் அனுப்பப்பட்டது. அது இன்று 62 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் சென்னைக்கு அனுப்பக்கூடிய அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News