உள்ளூர் செய்திகள்
சுற்றித்திரியும் மயில்கள்

கொள்ளிடம் பகுதியில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வேண்டும்

Published On 2022-02-11 15:41 IST   |   Update On 2022-02-11 15:41:00 IST
கொள்ளிடம் பகுதியில் ஆயிரக்கணக்கில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர சரஸ்வதி விளாகம், கொண்ண காட்டுபடுகை, கீரங்குடி, பாலூரான் படுகை, மேலவாடி, கீழவாடி, பனங்காட்டான்குடி, வடரங்கம், நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, முதலைமேடுத்திட்டு, நாணல்படுகை, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 வருட காலங்களில் மயில்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் ஒரு மயில் கூட பார்க்க முடியாத நிலை மாறி இன்று கரையோரம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்கள் மற்றும் காடுகள், வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் பல ஆயிரக்கணக்கான மயில்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்ப்பதற்கு வசதியாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியை மயில்கள் பெரிதும் விரும்பி அங்கேயே வாழ்ந்து வருகின்றன.


ஆற்றின் கரையோரப் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று இறை தேடுகின்றன. பின்னர் மீண்டும் ஆற்றின் கரையோரப் பகுதியில் வந்து தங்கிவிடுகின்றன. 

வெயில் காலங்களில் மயில் உள்ளிட்ட பல பறவைகள் ஆற்றில் உப்பு நீராக மாறி விடுவதால் குடிநீர் தேடி அலைந்து சிரமத்துக்கு உள்ளாகின்றன.

மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அதிக எண்ணிக்கையில் பெருகி வரும் மயில்களை சிலர் மறைமுகமாக வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

ஒருபுறத்தில் மயிலை தெய்வமாக நினைத்து வழிபட்டு பாதுகாத்தும் வருகின்றனர். இன்னொரு புறத்தில் சிலரால் மயில்கள் வேட்டையாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

எனவே எந்த விதத்திலும் மயில்கள் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாக பறந்து திரிவதற்கு வாய்ப்பு அளிக்கவும், அதனை முழுமையாக பாதுகாக்கவும் வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News