உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பள்ளிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும்

Published On 2022-02-11 15:23 IST   |   Update On 2022-02-11 15:23:00 IST
பள்ளிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தல்
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியைச் சேர்ந்தவர் நாடிமுத்து மகன் நித்தீஸ்குமார் (வயது 9) இவர் பாப்பான் விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 4&ம் படித்து வந்தார். இவர் கடந்த 8&ந்தேதி பள்ளியில் இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 

தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நித்தீஸ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சிறுவனின் உடல்நலனில் அஜாக்கிரதையாக இருந்ததாக, பள்ளி தலைமை  ஆசிரியர் மகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பாப்பான் விடுதியில் மாணவர்களும், பெற்றோர்களும் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பகுதி மாணவர்களையும் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுப்பதாக கூறி மாணவர் நித்தீஸ்குமாரின் உறவினர்களும் அப்பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, டி.எஸ்.பி. வடிவேல், வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற 2 இடங்களுக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 2 இடங்களிலும் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பேசியதாவது : பள்ளியில் எத்தகைய அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் எந்த நிகழ்வு நேரிட்டாலும் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சமயோஜிதமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

Similar News