உள்ளூர் செய்திகள்
தேர்தல் விதிமுறைகள் விழிப்புணர்வு கூட்டம்
தேவகோட்டையில் தேர்தல் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விதிமுறைகள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 171 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 56 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இறுதியாக அ.தி.மு.க. 25, தி.மு.க. 18, அ.ம.மு.க. 8, பா.ஜ.க. 21, காங்கிரஸ் 9, நாம்தமிழர் 3, தே.மு.தி.க. 1, மார்க்சிஸ்ட் 1, புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1, சுயேட்சைகள் 24 என மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் தலைமையில், தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர்கள் சரவணன், சத்தியசீலா, சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் எடுத்துரைத்தார்.
தேர்தல் விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பதட்டமான வார்டுகளை கண்டறிந்து அந்த வார்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்கள் வார்டுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.