உள்ளூர் செய்திகள்
பின்னணி பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசைக் கலாநிதி பட்டம்
பின்னணி பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசைக் கலாநிதி பட்டத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.
சீர்காழி:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.
அதில் திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கிராமிய இசை கலாநிதி என்கிற பட்டத்தையும், மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் அவரை அறிவித்தார்.
இதற்கு முன் முன்னணி பாடகர் டாக்டர் யேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவருக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தருமபுரம் ஆதீனம், சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் அகர்சந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சி. வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், திரைப்பட பின்னணி மற்றும் நாட்டுப்புற இசை பாடகரான டாக்டர். வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி எனும் பட்டத்தை வழங்கி, தங்கப்பதக்கம் அளித்து அருளாசி வழங்கினார்.
இது நாட்டுப்புற இசைக் கலைக்கு கவுரவத்தை அளித்துள்ளதாக பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.