உள்ளூர் செய்திகள்
விபத்து

அரசு பஸ் மீது மினி பஸ் மோதல்- படியில் தொங்கி சென்ற மாணவர் உடல் நசுங்கியது

Published On 2022-02-08 16:23 IST   |   Update On 2022-02-08 16:23:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பஸ் மீது மினி பஸ் மோதியதில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவரின் உடல் நசுங்கியது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஆனத்தூர்நத்தம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (வயது16) . புதுப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை நத்தம் கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக பண்ருட்டிக்கு செல்லும் அரசு பஸ்சில் வந்தார்.

அப்போது பஸ் படிக்கட்டில் லோகாநாதன் பயணித்தார். இந்த பஸ் புதுப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது பண்டரக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் புறப்பட்டது.

அப்போது அந்த வழியாக அம்மாபேட்டையில் இருந்து வந்த தனியார் மினிபஸ் ஒன்று அரசு பஸ் மீதுமோதியது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் லோகநாதன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கினார். இதனால் இவரது உடல் நசுங்கியது. மற்றொரு மாணவர் லேசான காயத்துடன் தப்பினார்.

தகவல் அறிந்ததும் புதுப்பேட்டைபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் உடல் நசுங்கி உயிருக்கு போராடிய மாணவன் லோகநாதனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம்ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் படியில் பயணம் செய்யும் பயணிகளை போலீசார் இறக்கி விட்டனர்.

Similar News