உள்ளூர் செய்திகள்
மாசிமக பெருவிழா கொடியேற்றம்

உத்வாகநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்

Published On 2022-02-08 15:12 IST   |   Update On 2022-02-08 15:12:00 IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா 200 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. 

அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மாசி மக பெருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்நிலையே பலரது தொடர்முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு கோயிலில் மீண்டும் மாசி மகப் பெருவிழா தொடங்கியுள்ளது.

இதை முன்னிட்டு, நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கல்யாண மாரியம்மன் கிராம தேவதை உற்சவம் ஆகியன நடைபெற்றது. இன்று காலை விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு துவஜாரோகணம் என சொல்லப்படும் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் ஹரிசங்கரன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், தினசரி காலை மாலை சுவாமி வீதி உலாவும், முக்கிய உற்சவமாக வருகிற 12-ம் தேதி சகோபுர தரிசனம், 16-ம் தேதி திருத்தேரோட்டம், 17-ம் தேதி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடத்தப்பட்டு உற்சமானது 18-ம் தேதி நிறைவடைகிறது.

Similar News