உள்ளூர் செய்திகள்
மழையூர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மழையூர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மழையூரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபெரியநாயகி அம்பாள் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீ அகத்தீஸ்வரர், ஸ்ரீபெரிய நாயகி அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7 நாட்களாக யாகசாலைபூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் பூஜை செய்யபட்ட புனித நீர் கோபுரகலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கருட பகவான் வானில் வட்டமிட அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ. முத்து ராஜா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், மழையூர் பொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் செய்திருந்தனர். கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.