உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்

விருத்தாசலத்தில் விழாக்கோலம்- விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2022-02-05 16:25 IST   |   Update On 2022-02-05 16:25:00 IST
கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு.

பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளையநாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி முன்னதாக கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந்தேதி மணிமுக்தா ஆற்றில் இருந்து யாக சாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது.

நாளை (6-ந்தேதி) காலை 4 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள், காலை 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணாஹூதி, பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகா பூர்ணாஹூதி, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடு, 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள் மகா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கிறார்கள். விழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழு தலைவரும், ஜெயின் ஜூவல்லரி அதிபருமான அகர்சந்த் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க நவீன மின் மோட்டார் மற்றும் நீர் தூவும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

Similar News