உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருமணமான வாலிபர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தாய் தீக்குளிப்பு

Published On 2022-02-04 13:47 IST   |   Update On 2022-02-04 13:47:00 IST
தேவகோட்டையில் திருமணமான வாலிபர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தாய் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 17 வயது மகள் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த மாணவியின் தாயார் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் காணப்பட்ட மாணவியின் தாயாருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு காரைக்குடியில் பணிபுரியும் நாகர்கோவிலைச் சேர்ந்த திருமணமான முத்துக்கருப்பன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை மாணவியின் தாயார் கண்டித்துள்ளார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாத முத்துகருப்பன் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மிரட்டியும் வந்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த மாணவியின் தாய் தீக்குளித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News