உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மருத்துவ கல்வி உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடங்களை அள்ளிய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் - ஒரே பள்ளியில் 7 மாணவிகளுக்கு ஜாக்பாட்

Published On 2022-01-29 11:47 IST   |   Update On 2022-01-29 11:47:00 IST
மருத்துவ கல்வி உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடங்களை அள்ளிய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை:

மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும்  அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு 436 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிக்க இடங்கள் கிடைத்தன. நடப்பு ஆண்டில் கூடுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் 544 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து சென்னையில் நடந்த உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 24 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 4 பேர் பி.டி.எஸ். படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.   
குறிப்பாக தர வரிசை பட்டியலில் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஐ. சிவா முதலிடத்தை பிடித்தார். இவரின் தந்த ஆட்டு தோல் வியாபாரம் செய்கிறார். தன்னுடைய மகனுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.


அதேபோன்று புதுக்கோட்டை கீரமங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 5 மாணவிகளுக்கு அரசு கல்லூரிகளிலும், ஒரு மாணவிக்கு தனியார் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. இன்னொரு மாணவி பல் மருத்துவம் படிக்க தேர்வானார். கடந்த ஆண்டும் இதே பள்ளி மாணவிகள் 4 பேர் தேர்வாகி மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். புதிய சாதனை படைத்த மாணவிகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
 
 இந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி  தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பாராட்டினார்.இவர் ஏற்கனவே மேற்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது. மருத்துவ கல்வியில் எம்.பி.பி.எஸ். இடங்களை புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அள்ளி வந்தது மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

Similar News