உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விபத்தில் காயமடைந்தவர் திடீர் சாவு: தவறான சிகிச்சையால் இறந்ததாக உறவினர்கள் தர்ணா

Published On 2022-01-27 05:57 GMT   |   Update On 2022-01-27 05:57 GMT
விபத்தில் காயம் அடைந்தவர் திடீரென இறந்ததால் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாளின் மகன் முருகேசன் (வயது 27). இவர் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஆதனக்கோட்டை அருகே சோழகம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகேசனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் அவர் நலமாக இருந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது உறவினர்கள், குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். அதன்பின் அவருக்கு சிகிச்சைக்கான ஒரு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் சிறிது நேரத்திற்குள் முருகேசன் திடீரென இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நல்ல முறையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு தவறான ஊசியை செலுத்தியதால் முருகேசன் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரி  மருத்துவமனை வளாகத்தில் முருகேசனின் உடலை வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடலை பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News