உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு
ரூ.39 ஆயிரம் செலுத்தாத 2 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் நிலுவைத் தொகைகள் செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரம், 1வது வார்டுக்கு உள்பட்ட திரு.வி.க. நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் ரூ.14 ஆயிரம், மற்றொரு குடியிருப்பில் வைப்புத் தொகை உள்பட ரூ.39 ஆயிரம் செலுத்தாத 2 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி கமிஷனர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரி இனங்கள் மற்றும் குடிநீர் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீர் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.