உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் இந்துமதி(வயது 19). கல்லூரி மாணவியான இவர், தனது தாயாரின் மறைவிற்கு பிறகு ஊர்க்குளத்தான்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது உறவினர்களிடம் தனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறிய இந்துமதி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை உள்தாழிட்டு இருந்துள்ளார். வெகுநேரமாகியும் பூட்டிய கதவை திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மாணவி இந்துமதி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி மாணவி தற்கொலை குறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.