உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்ததில் சுந்தரராஜபெருமாள்.

கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 09:54 GMT   |   Update On 2022-01-13 09:54 GMT
மதுரை கள்ளழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கொரோனா கட்டுப்பாட்டால் ஆரவாரமின்றி நடந்தது.
அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறும். 
அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதம் 3-ம்தேதி முதல் (பகல்பத்து ராபத்து) உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. 

மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.30 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் செர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 

முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரராஜபெருமாள் அருள் பாலித்தார். 

சொர்க்கவாசல் திறப்பின்போது கொரோனா வைரஸ்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இக்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் காலை 5.30மணிக்கு  பக்தர்களின்றி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. 

பெருமாள் சிறப்பு  அலங் காரத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்வு முடிந்தபின் காலை  7 மணிக்குமேல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேற்கண்ட 2 கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வழக்கம்போல் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் ஆரவாரமாக நடைபெறும். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு பக்தர்களின்றி நடைபெற்றதால் சொர்க்கவாசல் திறப்பு களை இழந்து காணப்பட்டது.

Tags:    

Similar News