வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் திருமணத்திற்காக நர்சு உடையில் நகை பறித்த இளம்பெண்
வேலூர்:
அணைக்கட்டு அருகே உள்ள பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பதியம்மாள் (வயது 80). இவர் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள எக்ஸ்ரே அறை முன்பு காத்திருந்தார்.
அவரிடம் நர்சு உடை அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். எக்ஸ்ரே எடுக்கும்போது நகை எதுவும் அணிந்திருக்கக் கூடாது. எனவே அதை கழட்டிக் கொடுங்க என கேட்டுள்ளார்.அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுதான் என நம்பிய ராம்பதியம்மாள் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை கழட்டிக் கொடுத்தார். நகை வாங்கியதும் இளம்பெண் அதனை ஒரு பேப்பரில் சுற்றி தருவதாகக் நகையை எடுத்துக்கொண்டு வெறும் பேப்பரை சுற்றி ராம்பதியம்மாளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராம்பதியம்மாள் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கேமராவில் இளம்பெண் நர்சு உடையில் மூதாட்டியிடம் நகை வாங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று செயின் பறிப்பு நடந்த இடத்தில் அதே இளம்பெண் நர்சு உடையில் நின்று கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இளம் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் திருமணத்திற்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.