உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் ஆஸ்பத்திரியை தவிர எங்கும் செல்லக் கூடாது

Published On 2022-01-07 15:10 IST   |   Update On 2022-01-07 15:10:00 IST
வேலூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் ஆஸ்பத்திரியை தவிர எங்கும் செல்லக் கூடாது என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாநகர பகுதியில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்தவர்கள் காந்தி ரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். 

லாட்ஜிகளில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வேலூர் மாநகர சாலைகளிலும் கோட்டை பகுதிகளிலும் பரவலாக சுற்றித் திரிகின்றனர்.

தேவையில்லாமல் அவர்கள் சுற்றி திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காந்தி ரோடு உட்பட 8 இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த யாராவது அந்த வழியாக வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.

வேலூர் கோட்டை மற்றும் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கக் கூடாது.மேலும் இதுகுறித்து லாட்ஜ் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏதாவது அத்தியாவசிய பொருட்கள் தேவையெனில் லாட்ஜி பணியாளர்கள் மூலம் வாங்கிக் கொள்ளவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.

Similar News