உள்ளூர் செய்திகள்
கொடநாடு கொலை வழக்கு: ஐ.ஜி. தலைமையில் விசாரணை தீவிரம்
கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜாமீனில் உள்ள 2 குற்றவாளிகள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரித்தனர்.
கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்க்க கூடிய ஊழியர்கள், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமை யாளர் என இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு ஆதாரங்களை திரட்டினர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விபத்தில் இறந்த கனகராஜின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தல் மற்றும் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை யும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களி டம் பல கட்டங்களாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுவரை ஊட்டி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்து வந்த விசாரணை தற்போது நிர்வாக காரணங்களுக்காக கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு சம்மன் அனுப்பினர்.
அதன்படி கடந்த 22-ந்தேதி அவர் கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் கொடநாடு எஸ்டேட் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.
தற்போது மீண்டும் கொடநாடு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் அடுத்த கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய 10-வது குற்றவாளி ஜிதின் ஜாய் மற்றும் உதயகுமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்னர்.
இதற்காக அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ள தனிப்படையினர் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கோவை போலீஸ் பயிற்சி மையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி 7-ந்தேதி ஜித்தின் ஜாயிடமும், மற்றொரு குற்றவாளியான உதயகுமாரிடம் 8-ந்தேதியும் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
அவர்களிடம் இந்த கொலை, கொள்ளை சம்பவ த்தில் அவர்களின் பங்கு என்ன? எப்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை 2 பேரிடம் கேட்க உள்ளனர்.
இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.