உள்ளூர் செய்திகள்
கைது

பேரணாம்பட்டு அருகே 18 செம்மரக்கட்டைகள் கார்களுடன் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2022-01-03 09:23 IST   |   Update On 2022-01-03 09:32:00 IST
பேரணாம்பட்டு அருகே 18 செம்மரக்கட்டைகள், கார்களுடன் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டை அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் குடியாத்தம்-ஆம்பூர் சாலையில் மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த நேரத்தில் ஒரு காரின் டிரைவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். 2 கார்களில் மொத்தம் 8 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. 2 கார்களுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மற்றொரு காரின் டிரைவர் வேலூரை அடுத்த அமிர்தி அருகில் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (வயது 30) என்றும், தப்பியோடிய கார் டிரைவர் ராகுல் என்றும் தெரிய வந்தது.

சுரேஷ்பாபு காட்பாடியில் இருந்து 2 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்த தன்னுடைய மாமா பழனி (52) என்பவரின் நிலத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல முயன்றபோது, போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து எம்.வி.குப்பத்தைச் சேர்ந்த பழனியின் நிலத்தில் உள்ள குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 10 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 18 செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து மேல்பட்டி போலீசார் கார் டிரைவர் சுரேஷ்பாபு (28), அவரின் மாமா பழனி (52) ஆகியோரை பிடித்து பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கார் டிரைவரும் செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்தவருமான ராகுலை வனத்துறையினரும், போலீசாரும், வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News