உள்ளூர் செய்திகள்
திருட்டு

மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

Published On 2021-12-25 17:27 IST   |   Update On 2021-12-25 17:27:00 IST
மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மறைமலைநகரில் உள்ள வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு வங்கியின் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சார் உங்க பணம் ஏதோ கீழே கிடக்கிறது என்று கூறியுள்ளார். உடனே முருகேசன் கீழே குனிந்து பார்க்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் முருகேசனின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி கொண்டு மர்மநபர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து முருகேசன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Similar News