உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவ -மாணவிகள் மறியலில் ஈடுபட்ட காட்சி

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

Published On 2021-12-11 15:02 IST   |   Update On 2021-12-11 15:02:00 IST
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை -செங்கம் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வரும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் அரசு பஸ்களையே நம்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் மாணவர்களின் வசதிக்காக போதிய பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை முன்பு மாணவ- மாணவிகள் பலர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எங்களில் பலர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அரசு பஸ்சை நம்பித்தான் கல்லூரிக்கு செல்கிறோம். ஆனால் இயக்கப்படும் பஸ்களில் அதிகம் பேர் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்கு சென்று வரும் நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போலீசார் கூறுகையில், கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Similar News