உள்ளூர் செய்திகள்
சிறுத்தை

குடியாத்தம் அருகே காப்பு காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு

Published On 2021-12-10 16:23 IST   |   Update On 2021-12-10 16:23:00 IST
குடியாத்தம் அருகே காப்பு காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதையடுத்து தண்டோரா போட்டு கிராம பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குடியாத்தம்:

குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப்பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது.

குடியாத்தம் வனச்சரகத் தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த சிறுத்தைகள் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும் மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைன குண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் ஜோடி ஜோடிகளாக சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் 2 படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட மாடு மேய்ப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

அதேபோல் பரதராமி எடுத்த கொட்டாளம் செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் 2 பெரிய சிறுத்தைகள் பகல் நேரங்களில் சாலையை கடந்து சென்றது. அதேபோல் தனகொண்டபல்லி காட்டுப் பகுதியிலும், கொட்டாரமடுகு வனப்பகுதியிலும் சிறுத்தைகள் சுற்றித்திரிந்து வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்குதகவல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் வனப்பகுதியில் 4 ஜோடி பெரிய சிறுத்தைகளும் குட்டிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலாவருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப்பாது காவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் கொட்டார மடுகு, கல்லப்பாடி முதலியார்ஏரி, கொட்டாரம், கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சில தினங்களாக தண்டோரா மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் பத்திரமாக வைத்திருக்கவும், தேவையில்லாமல் காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பெரும்பாலும் காப்புக் காட்டிற்க்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதால் சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Similar News