உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

அனுக்கூரில் வீட்டில் பிரசவித்த தாய்-குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Published On 2021-12-05 13:33 IST   |   Update On 2021-12-05 13:33:00 IST
அனுக்கூரில் வீட்டில் குழந்தை பெற்ற தாயும், அவரது குழந்தையும் இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(வயது 36). இவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் மகளும், 9-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இந்நிலையில் செல்வராணி 3-வது முறையாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வராணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரது உடலையும் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து சென்று இறந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News