போத்தனூரில் ரெயிலில் பயணியிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது
கோவை:
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவை வந்தார். ரெயில் போத்தனூர் வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார்.
அப்போது செல்போன் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரெயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதையடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை தேடி வந்தார். அப்போது செல்போன் எண் சிக்னலை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமாரிடம் ரெயிலில் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.