செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி, ராசிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60). இவரது மகன் சதீஷ். தந்தை-மகன் இருவரும் அவர்களது வீட்டின் அருகிலேயே பேப்பர் கப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகின்றனர். அதில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 20 பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் மனைவிக்கு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதை பார்ப்பதற்காக சதீஷ், சக்திவேல் ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்று இருந்தனர். பின்னர் நேற்று மாலை சக்திவேல் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளின் அடிப்படையில் வெளி நபர்கள் யாரேனும் வந்து வீட்டிற்குள் இருந்த நகையை திருடிச் சென்றனரா? அல்லது சக்திவேல் நடத்திவரும் பேப்பர் கப் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் யாரேனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.