செய்திகள்
விபத்து

மகன் திருமணத்தன்று சோகம்- வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2021-11-15 10:31 GMT   |   Update On 2021-11-15 10:31 GMT
மகனின் திருமணத்தன்று சீர்வரிசைகளை வீட்டில் வைத்துவிட்டு வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News