செய்திகள்
சகோதரியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு 7 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்கள்
மண்டபம் வந்த தாய்மாமனுக்கு சகோதரி உறவினர்களுடன் இணைந்து ஆரத்தி எடுத்து மண்டபத்தினுள் அழைத்து சென்றார்.
திருப்பூர்:
பூப்படைந்த விழா என்றாலே தாய்மாமன் சீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சீர்வரிசை என்பது உறவினர்கள் மத்தியில் கவுரவத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரின் மகள் சதுன்யா பூப்புனித நன்னீராட்டு விழா குன்னத்தூர் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தனது சகோதரியின் மகள் பூப்படைந்த விழாவிற்கு வேலுச்சாமி, சதீஷ் உள்ளிட்ட தாய்மாமன்கள் அந்த கால வழக்கப்படி பண்பாட்டை நினைவூட்டும் வகையில் 7 இரட்டை மாடு வண்டிகளை பூட்டி கொண்டு தேங்காய், பழம் என 25 வகையான சீர் தட்டுகளை எடுத்து கொண்டு உறவினர்கள் புடை சூழ, மேளதாளங்கள் முழங்க குன்னத்தூரிலிருந்து திருமண மண்டபம் வரை சுமார் ஐந்து கி.மீ., தூரம் மாட்டுவண்டிகளில் தாய்மாமன் சீரினை எடுத்து கொண்டு வந்தனர்.
மண்டபம் வந்த தாய்மாமனுக்கு சகோதரி உறவினர்களுடன் இணைந்து ஆரத்தி எடுத்து மண்டபத்தினுள் அழைத்து சென்றார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இறுதியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர் எடுத்து வந்து பண்பாடு நினைவூட்டும் வகையில் வழங்கியது உறவினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.